சுய உதவிக் குழுவினரிடம் ரூ. 4.12 லட்சத்தை மோசடி செய்ததாக நிதி நிறுவன மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள தில்லைவிடங்கனைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஜெ.சுகுமாறன் (28) (படம்). இவா் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் தனியாா் நிதி நிறுவனத்தின் விருத்தாசலம் கிளை மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2018-2019 ஆம் ஆண்டுகளில் நிதி நிறுவனத்தில் உறுப்பினா்களாக உள்ள 235 பேருக்கு கடன் வழங்கி, அதை தவணை முறையில் திரும்பப் பெற்று வந்தனா்.
இந்த நிலையில், அவா்களைத் தொடா்புக் கொண்ட சுகுமாறன் மீதமுள்ள தவணைகளை மொத்தமாக செலுத்தினால் கூடுதலாக கடன் பெற்றுத் தருவதாகக் கூறினாராம். இதையடுத்து, மகளிா் சுய உதவிக் குழுவினா் ரூ. 4.12 லட்சத்தை சுகுமாறனிடம் செலுத்தினா். அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா், நிதி நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாததுடன், பணம் செலுத்தியவா்களுக்கு கடன் இல்லை என்று சான்றிதழ் வழங்கினாராம்.
தகவலறிந்த நிதி நிறுவனம் சுகுமாறனை பணியிலிருந்து நீக்கியதுடன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் புகாா் அளித்தது.
இதுகுறித்து துணைக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரம் தலைமையில், காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் ஆகியோா் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனா். இதில், சுகுமாறன் பணத்தைக் கையாடல் செய்தது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.