வீராணம் ஏரியிலிருந்து ஏரியின் பாதுகாப்பு வெள்ளியங்கால் மதகு வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான கிராமங்கள் தண்ணீரால் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. மேலும் வீராணம் ஏரிக்கு கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை, பாப்பாகுடி ஓடை, வெண்ணங்குழி ஓடை ஆகியவற்றின் வழியாக விநாடிக்கு 4 ஆயிரத்து 205கன அடி தண்ணீர் வருவதால் ஏரியின் நீர்மட்டம் அதன் மொத்த கொள்ளழவான 47.50 அடியில் 46.30 அடியாக உள்ளது.
அதாவது மொத்த கொள்ளலவான 1465 மில்லியன் கனஅடியில் 1173 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் மதகு வழியாக விநாடிக்கு 1000 கன அடியும், கீழ் குமிழி வழியாக 500 கன அடியும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ் அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 1564 கனஅடியும் வெளியேற்றப்பட்டுகிறது. சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 69 கன அடியும் நீர் அனுப்பப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாமூரி வீராணம் ஏரி, நீர் வெளியேற்றப்படும் வெள்ளியங்கால் மதகு ஆகியவற்றை வெள்ளிக்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காட்டுமன்னார்கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களான திருநாரையூர், வீரநத்தம், நடுத்திட்டு, செங்கழிநீர்பள்ளம், சிறகிழந்தநல்லூர், மடப்புரம்,வெங்கடேசபுரம், வீராணநல்லூர், வீராணந்தபுரம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் ஆயங்குடி கீழகடம்பூர், மேலகடம்பூர், ரெட்டியூர், தொரப்பு, கஞ்சங்கொல்லை,எடையார், ம.உடையூர், ராதாம்பூர், மோவூர், முட்டம், கருப்பேரி, திருமூலஸ்தாணம், அழிஞ்சிமங்கலம், பழஞ்நநல்லூர், சித்தமல்லி, அகரபுத்தூர், பா.புத்தூர், உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது.
இது பற்றி திருமூலஸ்தாணம் விவசாயி ரவி கூறியதாவது, நெற்பயிர் சூல் பயிர் நிலையில் காணப்படுவதால் இந்த மழையினாலும், தண்ணீரில் மூழ்கி காணப்படுவதாலும் நெல் மணிகள் பதராக மாறும். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என வேதனையுடன் தெரிவித்தார். ஆகவே மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.