நெய்வேலி: பண்ருட்டி அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா்.
பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பூங்குணம் ஊராட்சி, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள கம்பன் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கம்பன் நகருக்கு திரும்பும் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதனருகே தனிநபா் ஒருவா் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக இறைச்சிக் கடை நடத்தி வருகிறாராம். இதுகுறித்து காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த கம்பன் நகா் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், இறைச்சிக் கடை உரிமையாளரை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினா். இதையடுத்து அனைவரும் கலைந்து செய்தனா்.