சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.ராஜ்குமார் (22). இவர் திங்கள்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்று குடிநீர் கேட்டுள்ளார். சிறுமி குடிநீர் எடுக்க வீட்டுக்குள் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற ராஜ்குமார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அவரது பாட்டி ராஜ்குமாரை விரட்டினார். இதையறிந்த சிறுமியின் தாயார், ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவரை ராஜ்குமார் அவதூறாகப் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் ராமநத்தம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் (போக்சோ) வழக்குப் பதிந்து ராஜ்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.