முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். பயங்கரவாதத்தால் நாட்டின் பிரதமர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் உயிர்நீத்த தினத்தில் பயங்கரவாத எதிர்ப்புத் தின உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (என்எல்சி-நிலம் கையகப்படுத்துதல்) மங்களம் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்புத் தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமையில் காவலர்கள், அலுவலக பணியாளர்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரு இளையோர் மையம், செஞ்சிலுவை சங்கம் சார்பில் கடலூரில் உள்ள செஞ்சிலுவை சங்க கட்டடத்தில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிக்கு இளையோர் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெலன்ராணி தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்க மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், பயங்கரவாதம் ஒழிப்போம் என்ற தலைப்பில் பேசினார். புகையிலை ஒழிப்பு இயக்க தலைவர் கலைவேந்தன், இக்னைட் மன்றத் தலைவர் மகேஷ், இளையோர் படைத் தொண்டர் கெளரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.