வங்கியில் ரூ.1.60 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக முந்திரி வியாபாரியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டன் (40). முந்திரி வியாபாரி. இவர் 2017-ஆம் ஆண்டு தன்னிடம் இருப்பில் இருந்த 2,020 மூட்டைகள் முந்திரியை அடமானமாக வைத்து தனியார் வங்கியில் கடன் பெற்றார். இதில் தனது பெயரில் ரூ.65 லட்சம், மனைவி சங்கீதா பெயரில் ரூ.25 லட்சம், உறவினர்கள் இருவரது பெயரில் தலா ரூ.35 லட்சமாக பிரித்து மொத்தம் ரூ.1.60 கோடி வரை கடனாக பெற்றாராம்.
வங்கி நிர்வாகம் 2018-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முந்திரி மூட்டைகளை கணக்கிட்டபோது 670 மூட்டைகளில் முந்திரி இல்லாததும், அதற்குப் பதிலாக அதன் கழிவுகளை வைத்திருந்ததும் தெரிய வந்தது. முந்திரி மூட்டைகளை அதைப் பாதுகாத்து வந்த தனியார் நிறுவனத்துக்கும், வங்கி நிர்வாகத்துக்கும் தெரியாமல் மணிகண்டன் விற்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக வங்கிக் கிளை மேலாளர் ஜெயக்குமார் அளித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி வெள்ளிக்கிழமை மணிகண்டனை கைது செய்தார். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறார்.