கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை இறக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான "பானி' புயல் தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்று முதலில் கூறப்பட்டு வந்தது. பின்னர், புயலின் திசை மாறியதைத் தொடர்ந்து, ஒடிஸா மாநிலத்தில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டது. "பானி' புயல் சின்னம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் கடந்த ஏப்.26-ஆம் தேதி ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், 27-ஆம் தேதி இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டு தொடர்ந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை "பானி' புயல் ஒடிஸா மாநிலத்தில் கரையைக் கடந்தது. இதனால், கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டு, புயல் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. கடந்த சில நாள்களாக மேகமூட்டத்துடன் கடும் வெப்பமான சூழல் நிலவி வந்தது. வெள்ளிக்கிழமை இந்த நிலை மாறி காலை முதல் வெயிலின் தாக்கம் கடுமையான இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 102.2 டிகிரி வெப்ப நிலை பதிவானது. இதனால், பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது. கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாகவே இருந்தது.