பல்வேறு வழங்குகளில் தொடர்புடைய 255 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்துத் துறை தெரிவித்தது.
கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுத்திட மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கிறது. இந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துகளில் சம்பந்தப்பட்ட 35 வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அ.முக்கண்ணன் கூறினார்.
இதேபோல, செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கியதாக 190 பேரது ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுபோதையில் வாகனம் இயக்கிய 30 பேரது ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக, மதுபோதையில் வாகனம் இயக்குவது, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் இயக்குவது ஆகியவை விபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்கள் என்பதால் இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்துக்கு உள்ளானவர்கள் தொடர்ந்து 3 முறை இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களது ஓட்டுநர் உரிமம் நீதிமன்றம் மூலமாக நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் அ.முக்கண்ணன் கூறினார்.