விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் காவல் துறையினர் பல்வேறு அமைப்பினருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்துக்கு சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்து பேசினார். ஆய்வாளர்கள் சி.முருகேசன் (சிதம்பரம்), கே.அம்பேத்கர் (புவனகிரி), அமுதா (புதுசத்திரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிதம்பரம் வட்டாரப் பகுதியில்
உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி குழுவினர் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் பேசியதாவது: கிராம பகுதிகளில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க காவல் துறையில் அனுமதி பெற வேண்டும். காவல் துறை அனுமதிக்கும் பாதையில் மட்டுமே
ஊர்வலம் செல்லவேண்டும். பிற வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே மேளம் அடிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பிறர் மனதை நோகடிக்கும் விதத்தில் வாசகங்கள் அடங்கிய மேலாடைகளை அணியக் கூடாது. அன்று கிராமப் பகுதிகளில் மதுக் கடைகள் மூடப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் நாகராஜன் (சிதம்பரம் தாலுகா), ஆனந்தன் (பரங்கிப்பேட்டை), சுரேஷ்முருகன், செந்தில் (சிதம்பரம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி: இதேபோல, விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம், பண்ருட்டி திருவதிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் சண்முகம், ரேவதி, மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உதவி ஆய்வாளர்கள், விநாயகர் சிலை அமைப்பு நிர்வாகிகள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் விநாயகர் கோயில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும். வழிபாடு, ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்கள் நிகழாதவாறு விழாக் குழுவினர் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் தேவா, இந்து முன்னணி மாவட்டச் செயலர் வெங்கடேசன், பாஜக செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.