கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது நச்சு வாயுவால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, துப்புரவுப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் தனியார் கழிவு நீர் ஊர்திப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை வகித்து, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகளை படக்காட்சிகள் மூலம் வழங்கினார். துப்புரவு அலுவலர் டி.சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.