கடலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் 10 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.
பண்ருட்டி திருவதிகையில் இருந்து பாலூர் வழியாக கடலூருக்கு ஆட்டோ செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது. ஆட்டோவை திருவதிகையைச் சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவர் ஓட்டி வந்தார். திருவந்திபுரத்தை அடுத்துள்ள கே.என்.பேட்டை அருகே வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென பன்றி ஓடியதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சித்தரசூர் சிவக்குமார் (7), பாலூர் கோவிந்தசாமி (55), சங்கர் (30), ஏகாம்பரம் (42) உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.