தேர்த் திருவிழாவின்போது ஏற்பட்ட பிரச்னைக்கு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.
திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் தேர்த்திருவிழாவை தொடர்ந்து, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் புகழேந்தி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மண்டல துணை வட்டாட்சியர் எழில்வளவன், திட்டக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீப்ரியா, ஆவினங்குடி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய்ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி மற்றும் இருதரப்பு பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், வையங்குடி கிராமத்தில் கடந்த 12-ஆம் தேதி நடந்த நிகழ்வுகளை மறந்து இருதரப்பினரும் சுமுகமாக இருப்பது, முரண்பாடுகள் ஏற்பட்டால் வட்டாட்சியர் அல்லது காவல் துறையினரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டது. அமைதிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.