சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியல் புல வேதியியல் துறையில் வேதியியல் மன்றம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் வே.முருகேசன் பங்கேற்று, வேதியியல் மன்றத்தை தொடக்கி வைத்தார். அவர் பேசுகையில், மாணவர்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கு பேராசிரியர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகங்கள், நூலக வசதிகளையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். அறிவியல் புல முதல்வர் எஸ்.கபிலன் தனது வாழ்த்துரையில், வேதியியல் துறையில் பல்வேறு உலகத் தரமிக்க சாதனங்கள் உள்ளதாகவும், இந்த வசதிகளை மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வேதியியல் துறைத் தலைவர் கே.ஆர்.சங்கரன் தனது தலைமையுரையில், வேதியியல் துறை மாணவர்கள் கல்வி பயிலும்போதே NET, SET,CSIR போன்ற தகுதித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.