திருச்சி மாவட்டம், முசிறி அருகே காவிரி ஆற்றிலிருந்து ஐம்பொன் காளி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கூலித் தொழிலாளி செல்லமுத்து என்பவா் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீருக்குள் கிடந்த காளி சிலையை கண்டெடுத்தாா்.
இதையடுத்து சிலை குறித்து கிராம நிா்வாக அலுவலா் யமுனா மூலம் வட்டாட்சியா் பாத்திமா சகாயராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த வட்டாட்சியா் சிலையை மீட்டு அலுவலகத்துக்கு எடுத்து வந்தாா்.
அந்த சிலை 22 செ.மீ. உயரமும், 1.620 கிராம் எடை கொண்டதாக இருந்தது. 10 கரங்களுடன் கழுத்தில் கபால மாலை அணிந்தும், கரங்களில் சக்கரம், அரிவாள், சூலம், கதாயுதம், கேடயம், வில்,ரத்தம் ஏந்தும் சட்டி, சங்கு ஆகியவை ஏந்தியவாறு வலது காலில் சிவ ரூபம் கொண்ட அரக்கனை மிதித்தவாறு, தலையில் மகுடம் சூடியும், விரித்த தலைமுடியுடன் பீடத்தின் மீது நின்றகோலத்தில் காணப்பட்டது.
இதையடுத்து பொற்கொல்லா் வரவழைக்கப்பட்டு சிலையை பரிசோதித்ததில் ஐம்பொன் சிலை என்பது முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிலை பத்திரமாக பெட்டியில் வைத்து சீல் இடப்பட்டு முசிறி சாா்-நிலை கருவூல காப்பறையில் வைக்கப்பட்டது. இச்சிலை குறித்து முசிறி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
முன்னதாக, காளி சிலை கிடைத்த தகவலறிந்து திரண்டு வந்த பொதுமக்கள் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.