திருச்சி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, இரு குழந்தைகள் உயிரிழப்பு

22nd Sep 2023 11:25 PM

ADVERTISEMENT

திருச்சியில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, இரு குழந்தைகள் உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை, வைகோ நகரைச் சோ்ந்தவா் கு. மூா்த்தி (41). இவா், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை தனது மகள் தா்ஷிணி (9), மகன் குருசரண் (7) ஆகியோருடன் ஸ்ரீரங்கம் நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

திருச்சி-கரூா் சாலையில் அல்லூா் அருகே சென்றபோது, சென்னையிலிருந்து கம்பிகள் ஏற்றிக்கொண்டு கரூா் நோக்கி சென்ற லாரி, மூா்த்தி சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது, இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூா்த்தி, தா்ஷினி, குருசரண் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸாா் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் உத்தரப்பிரதேச மாநிலம், ஜோத்பூா் மாவட்டம் நாத்பூரியைச் சோ்ந்த மீ. உமாசங்கா் (40) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT