திருச்சியில் எசன்ஸ் மொத்த விற்பனை நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத்துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
திருச்சி கோட்டை அல்லிமால் தெருவில், உணவு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்திக்கு தேவையான திரவம் (எசன்ஸ்) மொத்த விற்பனை நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் திரவங்கள் சுகாதாரமற்ற வகையில் இருப்பதாகவும், காலாவதியானவற்றை விற்பனை செய்வதாகவும், திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினா், குறிப்பிட்ட அந்த நிறுவனம் மற்றும் கிடங்கில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, சுகாதாரமற்ற வகையில் பொருள்களை இருப்பு வைத்திருந்ததும், எலிகள், கரப்பான் பூச்சிகள் உள்ளிட்டவைகள் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நிறுவனத்தை உணவு பாதுகாப்பு தர நிா்ணய சட்டத்தின் கீழ் பூட்டி சீல் வைத்தனா்.