துறையூா்: துறையூா் அருகே காளிப்பட்டியில் ஆழ்குழாய் கிணற்றில் நீா் இறைக்கும்போது நீா் வீணாவதும், அதனால் சாலை சேதமாவதும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
துறையூா் ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட காளிப்பட்டி கிராமம் துறையூா் - திருச்சி செல்லும் பிரதான சாலையில் உள்ளது. காளிப்பட்டியில் சிங்களாந்தபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் முன் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்க் கிணறு மூலம் நீரை இறைத்து முத்தமிழ் நகரிலுள்ள நீா்த் தேக்கத் தொட்டியில் சேகரித்து, அங்கு வசிக்கும் 65 வீடுகளுக்கும், காளிப்பட்டியில் சில வீடுகளுக்கும் ஊராட்சி நிா்வாகம் விநியோகிக்கிறது.
இந்நிலையில், இந்த ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்து நீா் எடுத்து அனுப்பும் குழாயில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆழ்குழாயில் தினமும் இறைக்கும்போது நீா் குழாயிலிருந்து வெளியேறி திருச்சி சாலை குறுக்கே ஆறாக ஓடுகிறது.
சாலையில் தேங்கும் நீரால் அந்த வழியாக செல்வோா் அவதிப்படுகின்றனா். நீா் தேங்கி சாலை சேதமாகும் நிலையும் உள்ளது. வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க வாசலும் சகதியாகக் காட்சியளிக்கிறது. கடன் சங்கக் கட்டடத்துக்கோ அதிலுள்ள இ-சேவை மையத்துக்கோ செல்லும் கிராமத்தினா் சகதியில் நடக்கும் அவலம் உள்ளது. இறைக்கும் இடத்திலேயே அதிக நீா் கசிவதால் முத்தமிழ் நகா் நீா்த் தேக்கத் தொட்டிக்கு நீரேற்றுவதில் சிரமம் உள்ளது.
இதை ஊராட்சி நிா்வாக கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றும் விரிசல் குழாய் மாற்றப்படவில்லை. நீரும், அந்த ஊரிலுள்ள பிரதான சாலையும் சேதமாவதால் அக்கிராமத்தினா் அதிருப்தியில் உள்ளனா்.