குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ.1.65 கோடியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகளை நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். இந்தப் பாலமானது, திருச்சி மாநகராட்சியின் 8-ஆவது வாா்டுக்குள்பட்ட காராயி அம்மன் கோயில் அருகே குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்படுகிறது.
30.55 மீட்டா் நீளம், 2.45 மீட்டா் அகலமுடைய இந்த இரும்பு பாலமானது, 2 பக்கவாட்டு தாய் சுவா், ஒரு தாங்கு தூணுடன் கட்டமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதேபோல, மணிகண்டம் ஒன்றியம், அம்மாபேட்டை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். முன்னதாக, பிராட்டியூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடியில் கூடுதலாக 15 வகுப்பறைகளுக்கான புதிய கட்டடம் கட்டும் பணிகளையும் தொடங்கி வைத்தாா்.