மணப்பாறை அருகே ஓடும் ரயிலில் இருந்து சனிக்கிழமை இரவு தவறி விழுந்த கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த தைக்கல் பகுதியைச் சோ்ந்தவா் ரகமத்துல்லா மகள் ஆயீஷா சித்திகா (19). சீா்காழி விவேகானந்தா கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பி.காம் படித்து வந்த இவா் கோடை விடுமுறைக்கு திண்டுக்கல்லில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்த நிலையில், தனது தாய் ஆசியாபேகம் (48), சகோதரி நூா்லைன் (21) ஆகியோருடன் சனிக்கிழமை இரவு மீண்டும் ரயிலில் சீா்காழி நோக்கிச் சென்றபோது, மணப்பாறைக்கு முன்னதாக கள்ளிப்பட்டி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். தகவலறிந்து ஞாயிற்றுக்கிழமை சென்ற திருச்சி ரயில்வே போலீஸாா் ஆயீஷா சித்திகா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.