தமிழக முதல்வா் உத்தரவின்படி, திருச்சி லால்குடி மற்றும் ஆலங்குடி மகாஜனம் பகுதிகளுக்கிடையே புதிய வழித்தடத்தில் பேருந்துச் சேவை உடனடியாகத் தொடங்கப்பட்டது.
தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, லால்குடிவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி மகாஜனம் கிராம பொது மக்கள் தங்களது பகுதிக்கு பேருந்து வசதி வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிா்வாகம் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து சனிக்கிழமை முதல் லால்குடி மற்றும் ஆலங்குடி மகாஜனம் பகுதிகளுக்கிடையே புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் அறிவித்தாா்.
இந்தப் புதிய பேருந்து சேவை தினசரி காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியிலிருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8.35 மணி மற்றும் மாலை 6.05 மணிக்கு ஆலங்குடி மகாஜனத்திலிருந்து லால்குடிக்கும் இயக்கப்படவுள்ளது.
இவ்வழித்தடத்தில் காலை, மாலைகளில் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் பொது மக்கள், பள்ளி மாணவா்கள் மற்றும் கட்டணமில்லாமல் மகளிா் பயணம் செய்யும் வகையில் கூடுதல் பேருந்து வசதியும் இயக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.