திடக்கழிவு மேலாண்மை குறித்து அறியும் வகையில், தெலங்கானா மாநிலம், சித்திபெட் நகருக்கு திருச்சி மாநகராட்சியின் மகளிா் குழு பயணம் மேற்கொள்கிறது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகேயுள்ள சித்திபெட் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை அறிந்து கொள்ளும் வகையில், திருச்சி மாநகராட்சி துணை மையா் ஜி. திவ்யா தலைமையில் மொத்தம் 28 மாமன்ற உறுப்பினா்களை (அனைவரும் பெண்கள்) சித்திபெட் நகருக்கு வழியனுப்பிவைக்கும் நிகழ்வு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் இரா. வைத்திநாதன் ஆகியோா் அவா்களை வழியனுப்பி வைத்த
பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
திருச்சி மாநகராட்சி, சாஹஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சியில் சா்குலா் வேஸ்ட் சொல்யூஷன் எனும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத் திட்டன் ஒரு பகுதியாக ஜூன் 12, 13, 14 ஆகிய தேதிகளில் திருச்சி மாநகராட்சியின் துணை மேயா் மற்றும் 28 மாமன்ற உறுப்பினா்களுக்கு ஹைதராபாத் அருகில் உள்ள சித்திபெட் நகரத்துக்கான சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் குப்பைகளை சரியான முறையில் கையாளுவதற்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லா வாழ்க்கைமுறையை மேற்கொள்வதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குப்பைகளைப் பிரித்து வாங்குதல் மற்றும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக மாற்றுதல், ஒவ்வொரு வாா்டிலும் மறுஉபயோகம் செய்யக்கூடிய பாத்திரங்களின் வங்கியை செயல்படுத்துதல் மற்றும் குழந்தைகளுக்கு மென்சுரல் கப்கள், துணி நாப்கின்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவைக் குறைத்தல், நகர குப்பைசேகரிப்பு வாகனங்களை இயக்குவதற்கு மற்றும் உணவகங்களில் சமைப்பதற்கும் உயிரிவாயுவை வழங்க பயோ கேஸ் (உயிரிவாயு) ஆலைகளை செயல்படுத்துதல் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பாா்வையிடும் மகளிா் குழுவினா், அவற்றை திருச்சி மாநகரிலும் செயல்படுத்த பாலமாக செயல்படுவா். இதன் மூலம், திருச்சி மாநகராட்சியும் குப்பையில்லா நகரமாக மாறும் என்றனா்.