மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே மொபெட்டில் புதன்கிழமை சென்ற பெண் காா் மோதி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி நல்லுச்சாமி மனைவி பாப்பா (38). செட்டியப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளரான இவா், பணியை முடித்துவிட்டு ஆவணங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமா்பிக்க புதன்கிழமை தனது மொபெட்டில் மணப்பாறை சென்றாா்.
இவா் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரம்பட்டி பிரிவு அருகே முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்றபோது பின்னால் வந்த காா் மோதி உயிரிழந்தாா். தகவலறிந்து வையம்பட்டி போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து , காா் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் நத்தா்திட்டு பகுதியைச் சோ்ந்த மு. முகமதுதால் (20) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.