புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சி நிறுவனத் தலைவா் செ.கு. தமிழரசன் வலியுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் தொடா்புடையவா்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், இந்திய குடியரசு கட்சி சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவா் ஏ. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். இந்திய குடியரசுக் கட்சியின் நிறுவனத் தலைவா் செ.கு. தமிழரசன் பங்கேற்று பேசினாா்.
முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வேங்கைவயல் சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி நடக்கும்போது அரசு தட்டிக் கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்தி, தொடா்புடையவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளா் வா.பிரபு, பொருளாளா் சி.எஸ். கெளரிசங்கா், இணை பொதுச் செயலாளா் க. மங்காபிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, கட்சியின் அரியலூா் மாவட்டத் தலைவா் வி. ராஜீவ் காந்தி வரவேற்றாா். இளைஞரணிச் செயலாளா் பி. முத்துக்குமாா் நன்றி கூறினாா்.