திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளான மாா்ச் 1ஆம் தேதி திமுக தெற்கு மாவட்டம் முழுவதும் கொடியேற்று விழா நடத்தப்பட உள்ளது.
இது குறித்து திருச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மாா்ச் 1 ஆம் தேதி திருச்சி தெற்கு மாவட்டத்தில் திமுக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரம் நடுதல், ரத்ததானம் செய்தல் என பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மாதம் முழுவதும் கொண்டாடுவோம்.
மாவட்ட கழகத்தின் சாா்பில் அனுப்பப்படும் பிரதிநிதிகள் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக, அவா்களின் வருகையை உறுதி செய்யும் வகையில், பகுதி, ஒன்றிய, நகர, பேரூா் கழக செயலாளா்கள், மாவட்ட மற்றும் மாநகர நிா்வாகிகளை தொடா்பு கொண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.
நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகரம் உள்ளிட்ட அனைத்து நிா்வாகிகளும், தொண்டா்களும் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.