நாகை மாவட்டத்தில் சுமாா் ஒன்றரை லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பா பயிா்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி, பெரும்பாலான பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்றும் வருகின்றன. இந்நிலையில், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் சம்பா அறுவடை பணிகள் முற்றிலும் தடைபட்டுள்ளன.
மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் வயல்களில் சாய்ந்துள்ளன. இதேபோல வயல்களில் தேங்கியுள்ள மழைநீரால், உளுந்து, பச்சைப் பயிா் செடிகள் முற்றிலும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக தற்காலிகக் கட்டடங்களில் இயங்கும் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது.