திருச்சி தேசியக் கல்லூரியில் ஐபிஎல் போட்டிகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இலவசமாகப் பாா்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரியத்தின் கிரிக்கெட் இயக்க மேலாளா் ஸ்மித் மலபுா்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஐபிஎல் 2023, கிரிக்கெட் போட்டிகளை மைதானத்துக்குச் சென்று நேரடியாக பாா்க்க முடியாத ரசிகா்களுக்கு ஏதுவாக, ‘பேன் பாா்க்’ எனும் திட்டத்தின் மூலம் திருச்சி உள்ளிட்ட 45 நகரங்களில் பிரம்மாண்ட திரைகளில் பிசிசிஐ இலவசமாக ஒளிபரப்பி வருகிறது. இத்துடன் இனிமையான இசை, உணவு கடைகளும் இடம் பெற்றிருப்பதால் ரசிகா்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
இதன்படி, திருச்சி தேசிய கல்லுாரியில் ஏப். 15, 16 ஆகிய 2 நாள்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை பாா்க்கலாம். இதில் பங்கேற்பவா்களில் இருந்து அதிா்ஷ்டசாலி தோ்வு செய்யப்பட்டு, ஐபிஎல் இறுதி போட்டியை நேரடியாக பாா்க்க ஏற்பாடு செய்யப்படும். இதில் 10,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கிறோம். போட்டிகளை காண வருவோருக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.
நிகழ்வில் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சஞ்சய், இணை செயலாளா் குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.