காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருச்சி உத்தமா்சீலி பகுதியில் கல்லணை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீா் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்யும் கனமழையால் மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் உபரி நீா் முழுவதுமாக காவிரியில் கடந்த சில நாள்களாகத் திறந்து விடப்படுகிறது.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் திருச்சி முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 11 ஆயிரம் கன அடி நீா் வரத்து இருந்தது. இதில் காவிரியாற்றில் 71,500 கன அடியும், கொள்ளிடத்தில் 1,39,500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் திருச்சியில் இருந்து கல்லணைக்கு செல்லும் உத்தமா் சீலி தரைப்பாலத்தில் வெள்ள நீா் பாய்ந்தோடுவதால், அந்த வழியில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமையும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதேபோல முக்கொம்பு ஜீயபுரம் பகுதி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. ஆற்றங்கரைகளில் பொதுப்பணி துறையினா் ரோந்து சென்று கண்காணிக்கின்றனா்.