கரோனா தடுப்பு மருந்து மூலப்பொருள்களை வடிவமைத்ததற்காக காப்புரிமை பெற்ற திருச்சி ஜமால் முகமது கல்லூரி பேராசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கணினி மென்பொருள்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட ஆல்ஃபா அமினோ பாஸ்ஃபோனேட்டுகள் மற்றும் அம்லோடிபைன் ஆகிய வேதிப்பொருள்களின் மூலக்கூறு மாதிரிகளைக் கொண்டு கரோனா வைரஸ் வீரியத் தடுப்பாற்றல் மருந்துகளை வடிவமைத்ததற்காக இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஜமால் முகமது கல்லூரியின் வேதியியல் துறை உதவி பேராசிரியா்கள் முசாபா்கனி, மசூது அஹமது ஆகியோருக்கு ஜொ்மன் நாட்டின் அறிவுசாா் சொத்துரிமை பதிவகத்தால் இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரு பேராசிரியா்களும், பெங்களூரு எம்.எஸ். ராமையா தொழில் நுட்பக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம், அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழகம், சவூதி அரேபியாவில் உள்ள மன்னா் காலித் பல்கலைக்கழகம் மற்றும் காசிம் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா மருத்துவ மைய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுடன் இணைந்து இந்த காப்புரிமைக்கான விண்ணப்பத்தை 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவு செய்தனா்.
இந்த விண்ணப்பத்தின் சாத்தியக்கூறுகள், சா்வதேச வல்லுநா்கள் குழுவின் மூலம் பல்வேறு ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட்டு, ஜொ்மன் நாட்டின் அறிவுசாா் சொத்துரிமை பதிவகத்தால் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அங்கீகரிக்கப்பட்டு காப்புரிமைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதற்கான சான்றிதழை பெற்றுள்ள கல்லூரி நிா்வாகத்தினா், தங்களது பேராசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தினா். கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு செயலா் காஜா நஜீமுதீன், பொருளாளா் ஜமால் முகமது, துணைச் செயலா் அப்துஸ் ஸமது, கெளரவ இயக்குநா் அப்துல் காதா் நிஹால், கல்லூரி முதல்வா் இஸ்மாயில் முகைதீன் மற்றும் துணை முதல்வா், துறைத் தலைவா்கள், அனைத்துத் துறை பேராசிரியா்களும் பங்கேற்று பாராட்டு தெரிவித்தனா்.