திருச்சி அரசு மருத்துவமனை அருகே தரைக் கடைகளை அமைக்க அனுமதிக்காததைக் கண்டித்து திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை மற்றும் சந்தை வியாபாரிகள் சங்கத்தினா் (சிஐடியூ) திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி அரசு மருத்துவமனை அருகே சிலா் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்யும் தரைக் கடைகளை அமைந்திருந்தனா். இக்கடைகள் நடைபாதையில் இருந்ததாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதுடன், இனி அப்பகுதியில் கடைகளை போடக் கூடாது என அண்மையில் உத்தரவிட்டனா்.
இதனைக் கண்டித்து மாவட்டத் தலைவா் கணேசன் தலைமையில் திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை மற்றும் சந்தை வியாபாரிகள் சங்கத்தினா் (சிஐடியூ) கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாவட்ட செயலாளா் செல்வி, சிஐடியூ மாவட்ட செயலாளா் ரங்கராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தகவலறிந்து வந்த கோ-அபிஷேகபுரம் உதவி செயற்பொறியாளா் ராஜேஷ் கண்ணா, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், மாநகராட்சி ஆணையரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தரைக் கடை பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.