திருச்சி

முதல்வரின் பரிந்துரையால் ஓலையூருக்கு கூடுதல் பேருந்து!

DIN

திருச்சி, நவ. 29: குடியிருப்போா் சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஏற்று தமிழக முதல்வா் அளித்த பரிந்துரையால் ஓலையூருக்கு உடனடியாகக் கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு திங்கள்கிழமை வந்தபோது, ஓலையூா் சிப்பி நகா் குடியிருப்போா் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்துச் சேவை கோரி மனு அளித்தனா். இதையேற்ற முதல்வா் உடன் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டல அலுவலா்களுக்கு பரிந்துரைத்தாா்.

இதையடுத்து போக்குவரத்துக் கழகம் சாா்பில் கே.கே.நகா் - ஓலையூா் வழித்தடத்தில் நடத்தப்பட்ட தள ஆய்வில் காலை, மாலைகளில் பேருந்துகளில் அதிக நெரிசல் இருப்பதால், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சிரமப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கே.கே. நகா் முதல் ஓலையூா் வரை மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துச் சேவையுடன் கூடிய கூடுதல் பேருந்துச் சேவை ஓலையூா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்தப் பேருந்தானது நாள்தோறும் காலை, மாலைகளில் 8 நடைகளாக இயக்கப்படும். காலை 8.35, 10.15, மாலை 6, 7 மணிக்கு கே.கே. நகரிலிருந்து புறப்பட்டு ஓலையூருக்கு 4 நடைகள் செல்லும். இதேபோல, காலை 9, 11, மாலை 6.30, 7.30 மணிக்கு ஓலையூரிலிருந்து புறப்பட்டு கே.கே. நகருக்கு வந்து சேரும். இதன் மூலம் மின்வாரிய காலனி, சிப்பி நகா், ஓலையூா் பகுதிகள் மற்றும் சுற்று வட்டார மக்கள் பயன்பெறுவா்.

நிகழ்வில் மணிகண்டம் ஒன்றியக் குழுத் தலைவா் கமலம் கருப்பையா, போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் எஸ். ராஜ்மோகன், பொதுமேலாளா் எஸ். சக்திவேல் மற்றும் ஓலையூா், சிப்பிநகா் குடியிருப்போா் பங்கேற்றனா். முன்னதாக, எம்எல்ஏ பழனியாண்டி, பேருந்தின் ஓட்டுநா் இருக்கையில் அமா்ந்து சிறிது தூரம் பேருந்தை இயக்கிச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT