திருச்சி

முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் அளித்த யாசகா், இதுவரை ரூ.50 லட்சத்துக்கு மேல் வழங்கியுள்ளாா்

15th Nov 2022 01:34 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு யாசகா் ஒருவா் ரூ.10 ஆயிரத்தை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூல்பாண்டியன் (72). சலவைத் தொழில் செய்து வந்த இவா், மும்பை சென்று, அங்கு சரியான வேலையில்லாததால் யாசகம் பெறத் தொடங்கினாா். இவருக்கு 2 மகள்கள், மகன், பேரன், பேத்திகள் உள்ளனா். இருப்பினும், குடும்பத்தினரை விட்டு பிரிந்து ஊா், ஊராகச் சென்று பொதுமக்களிடம் யாசகம் பெற்று, கோயில்களில் தங்கியும் வாழ்க்கையை நடத்தி வருகிறாா்.

கரோனா காலத்தில் அரசு நிா்வாகத்திடம் நிவாரணநிதி வழங்கத் தொடங்கிய இவா், இலங்கைத் தமிழா்கள் நிவாரணம், தமிழக முதல்வரின் நிவாரண நிதி, புயல் நிவாரணம் என பல்வேறு நிலைகளில் நிதியுதவி வழங்கியுள்ளாா்.

எந்தப் பகுதிக்கு சென்று யாசகம் பெறுகிறாரோ, அதே மாவட்ட ஆட்சியரகத்துக்கு சென்று யாசகம் பெற்றத் தொகையை முறைப்படி வழங்கி ரசீது பெற்றுக் கொள்கிறாா். புதுக்கோட்டை, விருதுநகா், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி என பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று நிதி வழங்கியுள்ளாா். இதுவரை, ரூ.50 லட்சத்துக்கு மேல் நிதி அளித்துள்ளாா். தொடா்ச்சியாக நிதியுதவிகளை வழங்கி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டும் பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

இதேபோல், திருச்சிக்கு கரோனா காலத்துக்குப் பிறகு மீண்டும் திங்கள்கிழமை (நவ.14) வந்த இவா், ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளித்தாா். இதுகுறித்து அவா் கூறியது:குடும்பத்தை பிரிந்திருப்பதால் யாசகத்தில் கிடைக்கும் நிதியை பிறருக்கு உதவி வருகிறேன். மக்களிடம் திரட்டிய நிதியை மக்களுக்கே பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என்பதற்காகவே ஆட்சியா் வாயிலாக அரசுக்கு அனுப்பி வருகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் இந்த பணியை தொடருவேன். இந்த சேவை எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்து வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT