திருச்சி

பிசி, எம்பிசி, சீா்மரபினா் மாணவா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

15th Nov 2022 01:28 AM

ADVERTISEMENT

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் (பிசி, எம்பிசி, டிஎன்சி) மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை மாணவா்கள் அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்கள் தங்களின் வங்கிக்கணக்கு எண் மற்றும் ஆதாா் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். அரசு இணையதள முகவரியிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன.

மாணவா், மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை மாணவா்கள் அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்களை டிச.6ஆம் தேதிக்குள்ளும், புதிய இனங்களுக்கு டிச.15ஆம் தேதிக்குள்ளும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு எண் விவரங்களை விண்ணப்பத்தில் தவறாது குறிப்பிட வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவ.10ஆம் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை பரிந்துரைக்கலாம். எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி முதல்வா்கள் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவா்களுக்கு உதவித் தொகை பெற்று வழங்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT