டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் திறக்கப்பட்டு முக்கொம்புக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த காவிரி நீரை விவசாயிகள் மலா்கள், விதை நெல்களைத் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் மேட்டூரில் செவ்வாய்க்கிழமை பாசனத்துக்காக திறக்கப்பட்ட காவிரி நீரானது நாமக்கல், கரூா் மாவட்டங்களை கடந்து திருச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான முக்கொம்புக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தது. இதையடுத்து, பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரப் பிரிவு அதிகாரிகள் அணையில் பூஜை நடத்தி, பாசனத்துக்காக 41 மதகுகள் வழியாக தண்ணீரைத் திறந்துவிட்டனா். வரத்து தண்ணீா் முழுவதும் காவிரியில் திறக்கப்படுகிறது. அங்கு திரண்டிருந்த விவசாயிகள் காவிரியாற்றில் மலா்கள், நெல்மணிகளைத் தூவி வரவேற்றனா். சிறப்பு பூஜைகளும் நடத்தி காவிரித் தாயை வழிபட்டனா். இதேபோல பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்களும் காவிரி தண்ணீரை வரவேற்றனா்.
நிகழ்வில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அயிலை சிவசூரியன், புங்கனூா் செல்வம், வீரசேகரன், ராஜேந்திரன், கொடியாலம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பன்னீா்செல்வம், சமூகநீதிப் பேரவை ரவிக்குமாா், சமூக ஜனநாயகக் கூட்டணி சம்சுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.