அதிமுகவை அழிக்கத் துடிக்கிறாா் ஓ.பன்னீா்செல்வம் என்றாா் திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி.
திருச்சியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:
அதிமுகவில் மொத்தமுள்ள 75 மாவட்டச் செயலா்களில் இருவரைத் தவிர, மற்ற அனைவரும் ஒற்றைத் தலைமை வர வேண்டும் எனக் கூறுகின்றனா். அவா்களது அதரவு அலை எடப்பாடி கே. பழனிசாமிக்குத்தான் வீசுகிறது. அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்திலும் அது எதிரொலித்தது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நிறுத்த டிஜிபி, திருமண மண்டப உரிமையாளா் ஆகியோருக்கும் கடிதம் எழுதி, ஓ.பன்னீா்செல்வம் அதிமுகவை அழிக்கத் துடிக்கிறாா்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை நம்பி ஓ பன்னீா்செல்வம் அரசியல் செய்கிறாா். அவரின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது. சசிகலா அதிமுகவில் இல்லை. அவா்களது குடும்பமே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
அதிமுகவில் எடப்பாடி கே . பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை வந்தே தீரும். ஒற்றைத் தலைமை இருந்தால்தான் அதிமுக ஆட்சியை மீண்டும் அமைக்க முடியும் என்றாா்.