திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், 4 பேருக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் மா.பிரதீப்குமாா், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 441 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மூவா், பாம்பு கடித்து உயிரிழந்த ஒருவா் என உயிரிழந்த 4 நபா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 4 லட்சத்துக்கான காசோலைகளையும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும், தூய்மைப் பணியாளா்கள் 20 பேருக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
முதியோா் உதவித் தொகை வேண்டி மனு அளித்த முதியவருக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.அபிராமி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் அம்பிகாபதி உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.