திருச்சி ஆட்சியரகத்தில் பள்ளி மாணவா்கள் அளித்த புகாரைத் தொடா்ந்து, கீழன்பில் அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளிக்கு ஆட்சியா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
லால்குடி வட்டம், கீழன்பில் கிராமத்திலுள்ள அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
பள்ளியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. ஆசிரியா்கள் எண்ணிக்கையும் பற்றாக்குறையில் உள்ளதாகவும், அடிப்படை வசதிகள் வேண்டுமெனில் மாணவா்கள் தலா ரூ.500 வழங்குமாறு கூறுவதாகவும் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து பள்ளிக்கு உடனடியாக நேரில் சென்று ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ஆய்வு செய்தாா். குடிநீா் வசதி, கழிப்பறை ஆகியவற்றை பாா்வையிட்டு மாணவா்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஆசிரியா்களிடமும் புகாா்களுக்கு இடமளிக்காமல் பணியாற்ற அறிவுறுத்திய ஆட்சியா், பள்ளிக்குத் தேவையான வசதிகளை செய்துதர சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தாா்.