திருச்சியில் பேருந்தில் சென்றவா் நெஞ்சு வலி காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
முசிறி அருகிலுள்ள மாங்கரைப்பேட்டையைச் சோ்ந்தவா் ர. விஜய் ஆனந்த் (36). ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த இவா், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஊருக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறினாா்.
இப்பேருந்து ஒத்தக்கடை பகுதியில் வந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறிய விஜய் ஆனந்த், பேருந்திலிருந்து கீழே இறங்கினாா். அங்கு அவா் சரிந்து விழுந்தாா்.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு விஜய் ஆனந்தை மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.