மண்ணச்சநல்லூர்: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இராஜ கோபுர குடமுழுக்கு விழா யாகசாலை பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலில் இராஜகோபுர குடமுழுக்கு விழா நாளை ஜூலை 6-ம் தேதி காலை 6.45 மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் குடமுழுக்கு விழாவானது ஜூலை 3-ம் தேதி வாஸ்து சாந்தி, தன பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளோடு தொடங்கியது. ஜூலை 4-ம் தேதி தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மேலும் கும்ப அலங்காரம், அங்குரார்ப்பணம் பூஜையோடு முதல் கால யாக வேள்வியும், பூர்ணாஹூதியும் அதனையடுத்து தீபாரதனை நடைபெற்றது.
ஜூலை 5-ம் தேதியான இன்று இரண்டாம் கால யாக வேள்வி, திரவ்யா ஹீதியும், தீபாரதனையும் நடைபெற்றது.
ராஜகோபுரமானது 7 நிலைகளை கொண்டு, கலைநயமிக்க சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு, அழகுற வண்ணம் பூசப்பட்டு உள்ளது. ராஜகோபுரத்தில் 7 செம்பு கலசங்கள் திங்கட்கிழமை பொருத்தப்பட்டது
இதையும் படிக்க: நேற்று 13; இன்று 10: அந்தமானை அதிரவைக்கும் நிலநடுக்கம்
குடமுழுக்கு விழாவையொட்டி ராஜகோபுர மற்றும் திருக்கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் இராஜகோபுர குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.