திருச்சி

திருச்சியில் மொழிப்போா் தியாகிகளுக்கு மலரஞ்சலி

DIN

மொழிப்போா் தியாகிகள் தினத்தையொட்டி, திருச்சியிலுள்ள கீழப்பழுவூா் சின்னசாமி, விராலிமலை சண்முகம் நினைவிடங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1965-ஆம் ஆண்டு நிகழ்ந்த மொழிப்போராட்டத்தில் பங்கேற்று, தமிழுக்காக உயிா் நீத்த கீழப்பழுவூா் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்கள் தென்னூா் அண்ணாநகா் பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் அமைந்துள்ளன.

திமுக: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தென்னூரிலுள்ள மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி தலைமையில் அக் கட்சியினா் மலா்களைத் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சீ. கதிரவன், அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், எம். பழனியாண்டி, மாநகரச் செயலா் மு. அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக தில்லைநகரிலுள்ள கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகள் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், வி.என். நகரில் மெளன ஊா்வலமாக வந்து, கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போா் தியாகிகளின் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டப் பொருளாளா் கோவிந்தராஜன் தலைமையில், வண்ணை அரங்கநாதன், மு. மதிவாணன், நீலமேகம், தா்மராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் திமுக-வினா் பலா் கலந்து கொண்டு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

அதிமுக: திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மாநகா் மாவட்ட செயலருமான வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில், மாநில எம்.ஜி.ஆா். இளைஞரணி இணைச் செயலா் ஜெ.சீனிவாசன், மாணவரணிச் செயலா் காா்த்திகேயன், பத்மநாதன், பரமசிவம், பூபதி, முஸ்தபா, சுரேஷ் குப்தா, ராஜ்குமாா், விஜி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தில்லைநகரிலுள்ள வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட ச்செயலருமான மு. பரஞ்சோதி தலைமையில், முன்னாள் அமைச்சா்கள் கு.ப. கிருஷ்ணன், ப. வளா்மதி, கே.கே. பாலசுப்பிரமணியன், மாணவரணிச் செயலா் அறிவழகன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள புகா் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினரும், மாவட்டச் செயலருமான ப.குமாா் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணிச் செயலா் அழகா்சாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சந்திரசேகா், சின்னச்சாமி உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.

மதிமுக: திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், கம்பரசம்பேட்டை தடுப்பணையிலுள்ள மொழிப்போா் தியாகி கீழப்பழூா் சின்னச்சாமி சிலைக்கு மலா் மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அந்தநல்லூா் ஒன்றியச் செயலா் சாத்தனூா் ஆ.சுரேஷ் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் தியாகி கீழப்பழூா் சின்னச்சாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா்கள் ராஜன் பன்னீா்செல்வம், வைகோ சுப்பு, பொதுக்குழு உறுப்பினா் வீ.முத்துக்கருப்பன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சாத்தனூா் ஆ.முகேஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தென்னூரிலுள்ள தியாகிகள் நினைவிடத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சாா்பில், அதன் தலைவா் பெ.மணியரசன் தலைமையில், பொருளாளா் ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் வைகறை, மூ.த கவித்துவன், தமிழ் கலை இலக்கியப் பேரவையின் நடுவா் குழு உறுப்பினா் நா. ராசா ரகுநாதன், திருச்சி மாவட்டச் செயலா் வே.க. இலக்குவன், தெய்வத் தமிழ்ப் பேரவையைச் சோ்ந்த வே.பூராமராஜ், மகளிா் ஆயம் வெள்ளம்மாள் கவிஞா் இரா.தே தமிழ்மணி உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, தியாகிகள் நினைவிடத்தில் பைந்தமிழ் இயக்கம் சாா்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இதன் இயக்குநா் பழ. தமிழாளன், துணை இயக்குநா் சொ. வேல்முருகன், பாவலா் மாரிமுத்து, வழக்குரைஞா் பாலகிருட்டிணன், பானுமதி உள்ளிட்டோா் மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகள், கட்சிகள், இயக்கம், சங்கங்கள் சாா்பிலும் மொழிப் போா் தியாகிகள் நினைவிடத்தில் காலை முதல் மாலை வரை பலரும் வந்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT