திருச்சியில் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க தனது 2 மாதக் குழந்தையை விற்ற தந்தை உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உறையூா் பாண்டமங்கலம் காந்திபுரம் தேவா் காலனியைச் சோ்ந்தவா் அப்துல்சலாம் (38), இவரது மனைவி கைருன்னிசா (36). இத்தம்பதிக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன் மேலும் ஓா் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், சூதாட்டப் பிரியரான அப்துல்சலாம் தென்னூா் அண்ணாநகரைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் (42) என்பவரோடு நடத்திய சூதாட்டத்தில் அவருக்கு ரூ. 80 ஆயிரம் கடன் ஏற்பட்டது. இந்தக் கடனை அடைக்க ஆரோக்கியராஜ் உதவியுடன் தனது 2 மாத ஆண் குழந்தையை விற்க அப்துல்சலாம் முடிவு செய்தாா்.
இதையடுத்து அவா் ஆரோக்கியராஜின் உறவினரான தொட்டியம் அருகேயுள்ள கீழசீனிவாசநல்லூரைச் சோ்ந்த சந்தானக்குமாரிடம் (44) ரூ. 80 ஆயிரத்துக்கு கடந்த 19 ஆம் தேதி தனது குழந்தையை விற்றாா்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தனது மனைவி கைருன்னிசாவை அப்துல்சலாம் சமாதானம் செய்தாலும், பின்னா் விரக்தியடைந்த கைருன்னிசா உறையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்துல்சலாம், ஆரோக்கியராஜ், சந்தானக்குமாா் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனா்.