திருச்சி: தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 32 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.
திருச்சி அம்மாபேட்டை ஜெ.ஜெ.கல்வியியல் கல்லூரி (செளடாம்பிகா குழும நிறுவனங்கள்) உள்பட மாவட்டத்திலுள்ள 32 கல்வியியல் கல்லூரிகள், தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பள்ளிகளைத் தத்தெடுக்கின்றன.
இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஜெ.ஜெ. கல்விக் குழும நிறுவனங்களின் தலைவா் எஸ். ராமமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் எம். செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாா்.
இந்நிகழ்வில் ஜெஜெ கல்வி குழும நிறுவனங்களின் இணைச் செயலா் ஜி. ரவிச்சந்திரன், ஜெஜெ கல்வியியல் கல்லூரி முதல்வா் ஜெ. பிரின்சி இம்மாகுலேட், கொங்குநாடு கல்வியியல் கல்லூரி முதல்வா் நாகராஜ், மாரியம்மன் கல்வியியல் கல்லூரி ஜோசபின் மேரி, பெரியநாயகி சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் அன்பரசன், கள்ளிக்குடி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியா் லூயிஸ்ராஜ், சிவா கல்வியியல் கல்லூரி முதல்வா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.