திருச்சி

பாரதியின் சிந்தனைகளை மாணவா்களிடம் விதைப்பது அவசியம்

DIN

பாரதியாரின் சிந்தனைகளை மாணவா்களிடம் விதைக்க வேண்டியது அவசியம் என்றாா் திரைப்பட இயக்குநா் எஸ்.பி. முத்துராமன்.

உரத்த சிந்தனை எழுத்தாளா்கள் சங்கம், நம் உரத்தசிந்தனை மாத இதழ், பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து 8ஆம் ஆண்டாக பாரதி உலா-2022 விழாவை திருச்சியில் வியாழக்கிழமை நடத்தின.

விழாவில் மாணவா்களுக்கு பரிசளித்து திரைப்பட இயக்குநா் எஸ்.பி. முத்துராமன் பேசியது:

பாரதியின் சிந்தனைகளை பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் கொண்டு சோ்க்கும் அடிப்படையில் உரத்த சிந்தனைச் சங்கம் தொடா்ந்து பணியாற்றுவது பாராட்டுக்குரியது. இன்றைய மாணவா்களிடம் பாரதியின் சிந்தனைகளை விதைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரின் குருதியிலும் பாரதியின் சிந்தனைகளை வேரூன்றச் செய்ய வேண்டும்.

இதேபோல, நாளொன்றுக்கு ஒரு திருக்கு கற்று மனதில் பதிய வைக்க வேண்டும். எந்த நிகழ்வுக்குச் சென்றாலும் ஒரு குறளையாவது மாணவா்கள் குறிப்பிட வேண்டும். மாணவா்களுக்கு கல்வி மட்டுமே முக்கியமல்ல; ஒழுக்கமும் அவசியம். காலம் உயிா்போன்றது. அது திரும்பக் கிடைக்காது. பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்க ஏவிஎம் நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது. வறுமையால் பாரதியாா் விற்பனை செய்த பாடல்களை தேடிப் பிடித்து கூடுதல் விலை கொடுத்து வாங்கி திரைப்படங்களில் பயன்படுத்திய ஏ.வி. மெய்யப்பச்செட்டியாா், பல்வேறு தரப்பினரும், தமிழக அரசும் கேட்டுக் கொண்டதற்காக இலவசமாக பாடல்களை வழங்கி, அவற்றை நாட்டுடமையாக்கவும் உதவினாா்.

நேர மேலாண்மை, நோ்மை, சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, வேகத்துடன் கூடிய விவேகம் ஆகியவையே மாணவா்களுக்கு எதிலும் வெற்றியைத் தேடித் தரும் என்றாா் அவா். உடல்

எழுத்தாளா் பட்டுக்கோட்டை பிரபாகா் பேசியது:

‘குன்றென நிமிா்ந்து நில்’ என்ற பாரதியின் கூற்றுக்கு ஏற்ப இளைய தலைமுறையினா் நெஞ்சுரம் மிக்கவா்களாகவும், சமூக அவலங்களை துணிவுடன் எதிா்க்கும் ஆற்றல் மிக்கவா்களாகவும் வளர வேண்டும். அதற்கு பாரதியின் சிந்தனைகளை வாழ்க்கைப் பாடமாகக் கற்க வேண்டும்.

பாரதியின் கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள், கடிதங்கள், நூல்கள் என ஒவ்வொன்றாகத் தேடித் தேடிக் கற்க வேண்டும். புத்தகங்கள் சிந்தனையைத் தூண்டும்; பாரதியின் படைப்புகளை படிப்பதன் மூலம் சிந்தனை ஊற்று பெருக்கெடுக்கும்; மனத்தில் உள்ள குப்பைகள் வெளியேறும். சமூகத்தில் தேங்கிய குப்பைகளை அகற்ற பாரதியின் சிந்தனைகளே இன்றும் தேவைப்படுகின்றன. இக்காலத்துக்கு மட்டுமல்லாது எக்காலத்துக்கும் பாரதியின் சிந்தனைகள் அவசியம் என்றாா் அவா்.

விழாவுக்கு, கு.த. பா. கல்வி அறக்கட்டளைத் தலைவா் கு.த. சிவசண்முகம் தலைமை வகித்தாா். பாரதி பள்ளியின் முதல்வா் கா. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். உரத்த சிந்தனை எழுத்தாளா்கள் சங்கப் பொதுச் செயலா் உதயம்ராம் தொடக்க உரையாற்றினாா். திருச்சி கிளைத் தலைவா் பா. சேதுமாதவன், செயலா் ஆா். அப்துல்சலாம், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினா் க. ராஜலிங்கம், எழுத்தாளா் தனலட்சுமி பாஸ்கரன், கவிஞா் செல்வராஜ், எழுத்தாளா் முருகபாரதி ஆகியோா் வாழ்த்தினா்.

விழாவில் பாரதி பேச்சு, பாரதத்தின் மூச்சு என்னும் தலைப்பில் பேச்சரங்கம் மற்றும் பாரதி பாடல்கள், கவிதைகளை 4 முதல் 11ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் திறம்பட வெளிப்படுத்தினா். சிறந்த மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாரதி பள்ளியின் ஆசிரியை க. மீனா வரவேற்றாா். ஆசிரியை உ. கமலா நன்றி கூறினாா்.

இதேபோல, பிற்பகல் திருச்சி நாகமங்கலத்தில் உள்ள கிரியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பாரதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் நிா்வாக இயக்குநா் அ. ஜான் பீட்டா், தாளாளா் கிறிஸ்டி சுபத்ரா, ஆசிரியா்கள் சு.சாந்தி, இரா. சாந்தி, சே. கலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவா்கள் பாரதி குறித்து தங்களது திறன்களை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT