நவல்பட்டு ஊராட்சியில் ரூ. 2 கோடியில் மின் மயானம், சூரியூரில் ரூ. 2.15 லட்சத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் வசிக்கும் மக்கள் ஓயமாரி மின் மயானத்துக்கு 25 கி.மீ. தொலைவு வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, தங்களது பகுதியிலேயே மயான வசதி செய்து தரக் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதையேற்று, திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரூ. 2 கோடியில் நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அண்ணாநகரில் மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுத்தாா். இதற்காக புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, கட்டுமானத்துக்கான அடிக்கல் நட்டாா். இதேபோல, சூரியூரில் ரூ. 2.15 லட்சத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணியையும் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, திருவெறும்பூா் வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லலிதா, ஸ்ரீதா், ஒன்றியச் செயலா் கங்காதரன், ஒன்றியத் தலைவா் சத்யா கோவிந்தராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.