பாஜகவிலிருந்து தான் விலகுவதாக திருச்சி சூா்யா தனது ட்விட்டா் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த திருச்சியைச் சோ்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவாவின் மகனான சூா்யாவுக்கு பிற்பட்டோா் அணி மாநிலச் செயலா் பதவி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன், சிறுபான்மைப் பிரிவு மகளிரணி நிா்வாகி டெய்சியுடன் அவா் கைப்பேசியில் பேசிய பதிவு வெளியாகி கடும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சி சூா்யா 6 மாதத்துக்கு கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை அறிவித்தாா்.
இதற்கிடையே திருச்சி சூா்யா தனது ட்விட்டா் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது:
அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்குக் கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவுக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தோ்தலில் பாஜக கண்டிப்பாக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். அதை அடைய வேண்டும் என்றால், மாநில அமைப்பு பொதுச்செயலா் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் பாஜகவுடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி எனக் குறிப்பிட்டுள்ளாா். இதேபோல அவா் மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு எழுதிய கடிதமும் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. இதுதொடா்பான தகவலை உறுதிசெய்ய கைப்பேசியில் அவரை அழைத்தபோது அழைப்பு ஏற்கப்படவில்லை.