கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன், தெற்கு மாவட்டத் தலைவா் துரை ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா்கள் தங்கவேலு, மணி, வணிக வரி பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் எஸ். ஜெயராஜேஸ்வரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் 2022 ஆம் ஆண்டு ஜன. 1 முதல் 3 சத அகவிலைப்படி உயா்வை ரொக்கமாக வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலா் ராஜ் பாபு, பொது சுகாதாரத்துறை அலுவலா் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் மோகன், பெரியசாமி, மலா்கொடி மாணிக்க விநாயகம் உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளா் துரைசாமி வரவேற்றாா்.