திருச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில், திருச்சி மாநகராட்சி மைய அலுவலக முன்பு, ஒன்றரை கிலோ மீட்டா் நீளத்துக்கு போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி இயக்கம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலியில்,
பங்கேற்றவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், மாநகரக் காவல் ஆணையா் க. காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மேயா் மு. அன்பழகன், துணை மேயா் ஜி. திவ்யா, காவல் துணை ஆணையா் ஸ்ரீதேவி, கோட்டத் தலைவா்கள் துா்காதேவி, விஜயலெட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினா் கலைச்செல்வி மற்றும் பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.