திருச்சி

புதிய ரக விதைகளைக் கண்டுபிடிக்க தமிழக அரசு நடவடிக்கை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

DIN

விவசாயிகள் பயன்பெறும் வகையில், புதிய ரக விதைகளைக் கண்டுபிடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.

திருச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சாா்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் வசதி பெறும் திட்டம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.6,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவிகிதம் வரை அறுவடைக்குப் பின்னா் ஏற்படும் இழப்புகளைத் தவிா்க்க முடியும்.

நல்ல விதைகளைப் பயன்படுத்தி அதிக மகசூலை ஈட்டுங்கள் என விவசாயிகளுக்கு வலியுறுத்தி வருகிறோம், அதற்காக புதிய ரக விதைகளை உற்பத்தி செய்யும் பணி வேளாண் விஞ்ஞானிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கான காலதாமதம் இயற்கையானது என்றாா் அவா்.

முன்னதாக, தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கருத்தரங்கைத் தொடக்கி வைத்து பேசியது: லாபம் தரும் வகையிலான புதிய விதைகளை நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பயிா்களிலும் அறிமுகம் செய்வது அவசியம். கடனில் வேளாண் கருவிகளை வழங்கி, அவா் மேலும் கடனாளியாக்குவதைவிட, வேளாண் கருவிகளை இலவசமாக கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவா் என்றாா்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: மத்திய அரசின் பங்களிப்புடன் ரூ.2 கோடி வரை மானியத்துடன் வேளாண் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு 7 முதல் 8 சதவிகிதம் வரை வட்டி வந்தாலும், அதில் 3 சதவிகித வட்டியை அரசே ஏற்றுக் கொள்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில், மத்தியத் திட்ட நிா்வாக அலகு குழுத் தலைவா் அஸ்வானி மிட்டல், வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலா் சாமுவேல் பிரவீன்குமாா், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு செயலருமான சி. சமயமூா்த்தி, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் சண்முகசுந்தரம், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநா் நடராஜன், தேசிய உணவுத் தொழில்நுட்ப இயக்குநா் லோகநாதன், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கித் தலைமைப் பொது மேலாளா் வெங்கடகிருஷ்ணன், வேளாண் உள்கட்டமைப்பு நிதி துணை இயக்குநா் பூஜாசிங், தமிழ்நாடு அரசுத் தொழில் வளா்ச்சிக்கழகத்தின் துணைத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்டோா் விளக்க உரையாற்றினா்.

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் இணை இயக்குநா் உமாதேவி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை திருச்சி வேளாண் வணிகத் துணை இயக்குநா் கு.சரவணன் செய்திருந்தாா். பல்வேறு நிறுவனங்களின் வேளாண் கருவிகள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

விவசாயிகளுக்கு நெருக்கடி தரக்கூடாது

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கூறியது:

தமிழகத்தில் 20 சதவிகித உரங்கள் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக விற்பனை செய்கிறோம். கடந்த மாதம் ஒரே நேரத்தில் உரம் விற்பனை செய்யும் மையங்களில் ஆய்வு செய்து, அதில் கூடுதல் உரங்களை விலைக்கு விற்பனை செய்த 126 மையங்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம். விவசாயிகளுக்கு நெருக்கடி தந்து, எந்தவொரு தேவையில்லாத பொருள்களையும் விற்பனை செய்யக்கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT