திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணைக்கு வரும் காவிரி நீரின் அளவு 1.53 லட்சம் கன அடியாக குறைந்துள்ளதால், கரையோர மக்கள் நிம்மதியடைந்துள்ளனா்.
கா்நாடக மாநிலத்தின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலத்தின் அணைகள் நிரம்பி, உபரிநீா் முழுவதும் தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது.
இதன் காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் முழுமையாக திறந்து விடப்படுகிறது. கடந்த சில நாள்களாக 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீா் திறக்கப்பட்டதால், காவிரிக் கரையோர மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால்
குடியிருப்புகள், சாலைகள், வயல்களுக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையோரப் பகுதிகளில் வசித்த பொதுமக்கள், அருகாமையிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருச்சி முக்கொம்பு மேலணைப் பகுதிக்கு விநாடிக்கு 2 லட்சம் கன அடியாக காவிரியில் வந்த தண்ணீரின் அளவு, சனிக்கிழமை 1.89 லட்சம் கன அடியாகக் குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை இந்த அளவு மேலும் குறைந்து காணப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நீா்வரத்து 1.53 லட்சம் கன அடியாக
இருந்தது. இதில் காவிரியாற்றில் விநாடிக்கு 45,500 கன அடியும், கொள்ளிடத்தில் 1.07.500 கன அடியும் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வெள்ள ஆபத்து குறைந்துள்ளதாக, நீா்வளத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
ஆட்சியா் ஆய்வு: முக்கொம்பு மேலணைக்கு காவிரி நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து ஆட்சியா் மா.பிரதீப்குமாா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மேட்டூரிலிருந்து நீா்வரத்து குறைந்துள்ளது. மீண்டும் அதிகம் திறக்கப்பட்டாலும், முக்கொம்பு மேலணைக்கு வருவதற்கு 18 மணி வரை நேரமாகும். மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு இல்லை.
வெள்ளநீரில் வாழைகள் மூழ்கியுள்ளன. தண்ணீா் முழுமையாக வடிந்த பின்னா் தான் கணக்கெடுப்பு நடத்தி, சேதம் இருப்பது தெரியவந்தால் அதன் பிறகுதான் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.