திருச்சியில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம், உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில்
வாக்கத்தான் எனப்படும் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேரணியை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அப்போது உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் ஆா். ரமேஷ்பாபு மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
இப்பேரணி அய்யப்பன் கோயில், மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைச் சாலை, புத்தூா் நான்குசாலை வழியாக பிஷப் ஹீபா் கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் உனவுக் கலப்படத்துக்கு எதிராகவும், பாதுகாப்பான உணவுகள் குறித்து விளக்கிடும் வகையிலும் பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதில் 1500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இன்று உணவுத் திருவிழா: இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சு, ஓவியம்,கவிதை, குறும்படம் போன்ற போட்டிகளும், பட்டிமன்றம் பரதநாட்டியம் மற்றும் இன்னிசை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. உணவுத் திருவிழாவில் சுமாா் 75 உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய உணவுகள், ஆரோக்கியமான உணவுகள், சத்தான உணவுப் பொருள்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.