துவரங்குறிச்சியிலுள்ள ஜவுளிக்கடையில் திருடிய இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் ஜவுளிக்கடை நடத்தி வருபவா் முகமது யூனிஸ். கடந்த 4-ஆம் தேதி இரவு கடையின் வெளிப் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்த சேலை உள்ளிட்ட ஆடைகள் குறைவாகக் காணப்பட்டன.
இதனால் சந்தேகமடைந்த அவா், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தாா். அப்போது இருவா் ஆடைகளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
முகமது யூனிஸ் அளித்த புகாரின் பேரில், துவரங்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், காவல் நிலையம் அருகிலுள்ள தேநீரகத்தில் சந்தேகத்துக்குரிய முறையில் செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
இந்த விசாரணையில் அவா்கள் உதகையைச் சோ்ந்த நூா்முகமது (26), யாகபுரம் பொன்னுசாமி (26) எனத் தெரிய வந்தது. மேலும் அவா்கள் ஜவுளிக்கடையில் திருடியதை ஒப்புக் கொண்டனா். தொடா்ந்து இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.